தூத்துக்குடி
சட்டத்திற்கு புறம்பான போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவோடு இணைந்து தொடர் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக எட்டாவது வாரமாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான்பால், கவுன்சிலர் ரிக்டா, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஹென்சன் பவுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக துணை மேயர் ஜெனிட்டா கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விளக்கிப் பேசி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது ஜார்ஜ் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, சிலுவைகோவில் வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.
பேரணியில் தென்பாகம் காவல் நிலைய காவலர் முன்னா ஷெரிப், மாரிஸ்வரன், போக்குவரத்து தலைமை காவலர் முனீஸ்வரன், இளையோர் திருக்குறள் பேரவை நிறுவனர் ஆதிநாராயணன், நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் இயக்குனர் முத்துப்பாண்டியன், தாயகம் அறக்கட்டளை இயக்குனர் ஜெயக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணி முடிவில் போதைப் பொருட்களுக்கு எதிராக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக பள்ளியின் பசுமைபடை ஆசிரியர் அர்னால்டு நன்றி கூறினார். பேரணிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

