தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கில் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை ஒவ்வொரு மண்டலம் பகுதியிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த வாரம் வடக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 97 மனுக்களில் மறுநாள் அதில் 15 பேருக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டலம் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார்.
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 15 முதல் 19, 30 முதல் 37, 42, 44 மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 50, 51 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகள் தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி தொடக்க உரையில் பேசுகையில், ‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அவரது உத்தரவிற்கேற்ப மாநகராட்சிப் பணிகள் நடைபெறுகின்றன. 60 வார்டு பகுதிகளிலும் தொடர்ந்து மக்கள் பணி பாரபட்சமின்றி நடைபெற்று வருகிறது. அதில் எல்லா கட்சியினருக்கும் பொருந்தும். தூத்துக்குடியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் மழைநீர் செல்லும் பக்கிள் கால்வாய் உள்ளது. இதில் சில பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து கொட்டப்படும் நெகிழி பைகளாலும், குப்பைகளாலும் தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. தற்போது நெகிழி பொருட்கள் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்து உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பு நெகிழி கவர்களை பயன்படுத்தும் கடைகளில் சோதனை செய்து பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையெல்லாம் தடுக்கும் வகையில் மஞ்சள் துணிப்பை மாநகர பகுதியில் 1½ லட்சம் பேருக்கு விநியோகம் செய்யப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். அதை தொடர்ந்து பின்பற்ற உள்ளோம். தற்போது நெகிழி பொருட்களை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதனால் இனி கடைகளில் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும். இதை தவிர்க்கும் வகையில், கடைக்காரர்களே நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தி விடுங்கள். இல்லை என்றால் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பார்கள்.
தூத்துக்குடி பி அன்டு டி காலனியில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முத்தம்மாள் காலனியில் இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தூத்துக்குடி முழுவதும் 2000 கிலோ மீட்டருக்கு ரோடுகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மேலும் சிறிய சிறிய சந்து பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டு மாநகராட்சி பகுதியை பொழிவு பெறும் வகையில் அமைத்துள்ளோம். பொதுமக்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் அதன் பலன் என்னவென்று பின்னால் உங்களுக்கு தெரியவரும், என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
இந்த முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துவரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து மக்கள் பிரதிநிதிகள், பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள் என பலரும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்த முகாமில், பொறியாளர் சரவணன், திட்ட செயற்பொறியாளர் ரங்கநாதன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர்நல அலுவலர் டாக்டர் தினேஷ், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், மந்திரமூர்த்தி, இசக்கிராஜா, ஜான், பொன்னப்பன், கண்ணன், ராமர், கனகராஜ், கந்தசாமி, விஜயலெட்சுமி, பாப்பாத்தி அம்மாள், பகுதி செயலாளர் ரவீந்திரன், திமுக வட்டச் செயலாளர்கள் பொன்பெருமாள், மந்திரகுமார், வட்ட பிரதிநிதிகள் துரை, கணேசன், ஜெபக்குமார் ரவி, இளங்கோ, சோமசுந்தரம், கார்த்திகேயன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜோஸ்பர் மற்றும் கணேசன் உட்பட மாநகராட்சி அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்:
மாநகராட்சி மூலம் நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் மனுக்களை பெறுவதால், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் குறைகளை நேரடியாக தெரிவிப்பதற்கும் அதிகாரிகளிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் மிகப் பெரிய பாலமாக அமைந்துள்ளது. இதை ஒட்டு மொத்த மக்களும் வரவேற்றுள்ளனர். அவர்களது எண்ணத்திற்கேற்ப மனு கொடுத்த ஒரு மணி நேரத்தில் அதற்கான தீர்வு காணப்பட்டு சிலருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

