தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து தூத்துக்குடி- பாளை ரோடு, விவிடி சிக்னல் சந்திப்பு அருகில் உள்ள மைதானத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வரவேற்று பேசினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் சிவசாமி வேலுமணியை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில்
கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களின் எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், இந்த ஆட்சியில் நடைபெறும் எந்த பிரச்சினைகள் குறித்தும் பேசுவதோ, போராட்டம் நடத்துவதோ கிடையாது. அனைத்துக் கட்சிகளும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டது. அதிமுக யாருடனும் மறைமுக கூட்டணி வைக்கவில்லை. ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இருந்தால் பாஜவோடு கூட்டணி வைத்து ஒன்றிய அமைச்சர்களாக அதிமுகவினர் இருந்திருப்பார்கள். நாங்கள் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டோம். நாங்கள் கொள்கை கூட்டணி அமைத்துள்ளோம். கடந்த 2011ம் ஆண்டு தேமுதிகவுடன், அதிமுகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. அப்போது, அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்க்கட்சியாகவும் வந்தது. அந்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. எனவே, நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் தான் தூத்துக்குடி நகருக்கு ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.285 கோடியில் 4வது பைப் லைன் திட்டம் கொண்டு வரப்பட்டது. கோவில்பட்டி நகரில் ரூ.95 கோடியில் 2வது பைப் லைன் திட்டம் கொண்டு வந்தோம். இதன்மூலம் தூத்துக்குடி, கோவில்பட்டி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. குரூஸ்பர்னாந்து பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டது, சட்டமன்றத்தில் வஉசிதம்பரனார் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோருக்கு படம் திறக்கப்பட்டது எல்லாம் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. கடந்த மழை வெள்ளத்தின்போது மக்களோடு அதிமுக நின்று உதவிகளை செய்தது. ஆட்சியில் இருந்து திமுக விவசாயிகள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 200 பேரை தங்க வைத்து பாதுகாத்தவர். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கொள்கை கூட்டணி, வெற்றிக் கூட்டணி ஆகும். தமிழ்நாட்டு மக்களின் குரல் மக்களவையில் ஒலித்திட அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார். முன்னதாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மாியாதை செய்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.த.செல்லபாண்டியன், பாண்டியராஜன், மாநில அமைப்புச் செயலாளர் சின்னதுரை, முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர் சந்தனம், அவைத்தலைவர்கள் திருப்பாற்கடல், பெருமாள், மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஹென்றி, மாநில ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, வடக்கு மாவட்ட பொருளாளர் ஆரோன்மோசஸ், வடக்கு, தெற்கு மாவட்ட அணி நிர்வாகிகள் சுதாகர், பிரபாகர், விக்னேஷ், தனராஜ், வீரபாகு, துரைசிங், வலசை வெயிலுமுத்து, திருச்சிற்றம்பலம், டைகர்சிவா, சேகர், ஜாக்சன் துரைமணி, ராஜேந்திரன், கோசல்ராம், முருகன், ஜீவாபாண்டியன், வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, ரவீந்திரன், பிள்ளை விநாயகம், முனியசாமி, சரவணபெருமாள், மாநகராட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் ராஜகோபால், பகுதிசெயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ நன்றி கூறினார்.

