எடப்பாடி தொகுதியில் 7 ஆவது முறையாக போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டிலிருந்து அவர் திங்கட்கிழமை மதியம் எடப்பாடி வந்து சேர்ந்தார். பின்னர் எடப்பாடியில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், எஸ்.செம்மலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
எடப்பாடியில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்துவைத்து திங்கள்கிழமை தொண்டர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்தைக் காட்டும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி. எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.தனலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து எடப்பாடி தொகுதியில் நங்கவள்ளியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி ஜலகண்டாபுரம், கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி நகர பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 ஆவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்முறையாக கடந்த 1989 ஆம் ஆண்டு அதிமுக ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

