தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் பன்னம்பாறை கிராமத்தில் உள்ள பிரம்ம ஸ்ரீவினாயக சிதம்பரேஸ்வர் ஆலய வளாகத்தில் பச்சை வேஷ்டி சடையாண்டி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது. இங்கு வைத்து 3ம் ஆண்டு குருபூஜையும், ஜோதி வழிபாடும், தீபாரதனையும் நடந்தது.
இதில் திருநாணல்காடு கிராம பொதுமக்கள் மற்றும் துரை அய்யா, தண்டாயுதபாணி, மாரிகண்ணன், கா.முத்து, சிவ மா.தங்கராஜ், சிவ பொன்சிங் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இங்கு, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜையும், மாதந்தோறும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

பச்சை வேஷ்டி சடையாண்டி சித்தர் வரலாறு சுருக்கம்:
பச்சை வேஷ்டி சித்தரின் இயற்பெயர் செல்வம் ஆகும். இவர் பச்சை உடை மற்றும் சடையுடன் வலம் வந்ததால் இவரை பச்சை வேஷ்டி சடையாண்டி சித்தர் என்று பக்தர்கள் என்று அழைக்கப்பட்டார். திருச்சியில் பிறந்து, திருவண்ணாமலையில் வளர்ந்தார். திருச்செந்தூரில் சில காலம் தங்கினார்.

பின்னர் திருச்செந்தூர் அருகிலுள்ள திருநாணல்காட்டில் அமைந்துள்ள திருக்கண்டீஸ்வரர் – சிவகாமி அம்மாள் ஆலயத்திற்கு வந்தார். அங்குள்ள ஆற்றாங்கரையில் இடைக்காட்டு சித்தர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதில் ஊர் மக்களுடன் 48 நாட்கள் சிறப்பு யாகம் நடத்தி, 500 பால்குடம் எடுத்து திருக்கண்டீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். சில காலம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய ஞானதேசிகர் சமாதியில் தங்கி திருபணிகளை மேற்கொண்டார்.
பச்சை வேஷ்டி சடையாண்டி சித்தரிடம் வேண்டினால் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும்; சித்தராக விளங்கியதால் இவரது புகழ் சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. இவரைக் காண தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து தரிசனம் பெற்று சென்றனர். பக்தர்கள் பலருக்கு அதிசயங்களை நடத்தியும் உள்ளார். குறிப்பாக, ஊமையை பேச வைத்தும், ஊனமுற்ற ஒருவரை நடக்க வைத்தும் உள்ளார்.

சிதலமடைந்து கிடக்கும் கோயில்களை மீட்டு அவற்றை நன்கு புனரமைத்து கோவில் பூஜைகளை முறைப்படி நடத்தி வருவதையே தனது வாழ்வின் குறிக்கோளாக கொண்டு 6 கோவில்களுக்கு திருபணிகளை செய்து முடித்துள்ளார். 7வது கோவிலாக அணக்கரை கிராமத்தில் அமைந்துள்ள ஏழுஅம்மன் திருக்கோவிலில் நல்லமுறையில் திருப்பணிகளை மேற்கொண்டு வந்த சமயத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

