தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இருதினங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள், கடைகள் மூழ்கின. இதில் 52 பேர் வரை மரணமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மாடு, ஆடு, கோழிகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. பலர் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். பல பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் இன்று வரை சீரடையாத நிலையில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு பரிதவித்து வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளுக்குள் சுற்றியுள்ள பகுதியில் கண்மாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டும், காட்டாற்று வெள்ளமும் இணைந்து ஒரே நேரத்தில் பாய்ந்து வந்ததால், அதன் கோரத்தாண்டவத்தால் மாப்பிள்ளையூரணி ஊராட்சி முழுவதையுமே புரட்டி போட்டு விட்டது. இன்று வரை அப்பகுதியில் உள்ள வெள்ளநீர் அகற்றுவதற்கு கூடுதல் மின்மோட்டார்கள் வைக்கப்பட்டு பல இடங்களில் தற்காலிகமாக சாலை தோண்டப்பட்டும், பைப் மூலமும் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாதி வடிந்த நிலையில், மற்றப் பணிகளும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் இரவு-பகல் பாராமல் முழுமையாக பணியாற்றி வருகிறார். மேலும், அனைத்து பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.6000 நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள 15 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற பகுதிகளில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மாடு, ஆடுகளுக்கும் அரசு அறிவித்த நிவாரண உதவிகளை பெற்றுத் தர வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதற்கான கணக்கெடுப்பு விண்ணப்ப படிவங்களை வழங்கி பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
அதிக குக்கிராமங்களை கொண்ட பகுதியில் முழுமையாக அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும் சாலையையும் சீரமைத்து சிறிய குடிசை வீடு முதல் நடுத்தர வீடுகள் வரை பாதிக்கப்பட்டதை முழுமையாக கணக்கெடுத்து நிவாரணங்கள் வழங்க வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாக அனைத்து கட்டமைப்பு பணிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பினரின் ஒட்டுமொத்த குரலாக ஓங்கி ஒலிக்கின்றன.
இந்நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வெள்ள நிவாரண உதவித்தொகை ரூ.6000 மற்றும் 5கிலோ அரிசி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணியிலிருந்து டேவிஸ்புரம் செல்லும் சாலை, தருவைக்குளம் பிரதான சாலை, டேவிஸ்புரம் சந்திப்பு பகுதியில் ஏற்பட்ட சேதம், மாதாநகர் சந்திப்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு, கோமஸ்புரம் உப்பாத்து ஓடை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகள் குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தலைவர் சரவணக்குமார் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். இதை கேட்டறிந்த அமைச்சர்கள் எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில்: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள இந்த ஊராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மழை வெள்ள பாதிப்புகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியை முழுமையாக திட்டமிட்டு அனைத்துப் பணிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி செய்து கொடுக்கப்படும். உப்பாற்று ஓடை பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் மூலம் தேங்கிய வெள்ள நீர் முழுமையாக வெளியேற்றப்படும். அதன் பின் நிரந்தரமாக உப்பாற்று ஓடையில் இருபுறங்களிலும் கற்கள் பதிக்கப்பட்ட சிமெண்ட் தளம் 2 கி.மீ தூரம் அமைக்கப்படும். சேதமடைந்த சிறு, குறு ஓடைகள், பாலங்கள் போர்கால அடிப்படையில் முழுமையாக சீரமைக்கப்படும். மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறினார்.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா, கூட்டுறவு துறை மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாநில திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், இலக்கிய அணி அமைப்பாளர் வக்கீல் ரகுராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி, திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தளவாய், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியர் சாம்டேனியல்ராஜ், செயலாளர் பாலமுருகன், மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் அபுல்ஹாசன், தாசில்தார் ஜான்சன், ஒன்றிய திமுக வழக்கறிஞர் அணி சோனாராஜன் மற்றும் கப்பிகுளம் பாபு, கௌதம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

