தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசியும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.1000 நிவாரணத் தொகையாகவும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜெயராஜ் ரோடு, டூ.வி.புரம் 5வது தெரு, நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலெக்டர் லட்சுமிபதி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி வட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி ஆகியவற்றை தூத்துக்குடியில் 93 நியாய விலைக்கடையில் வழங்கும் இந்த திட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் கனிமொழி அளித்த பேட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரல் உள்பட மாவட்டத்தில் பல இடங்கள் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் பலர் தனது வீடு மற்றும் உடமைகளை இழந்து பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு குறு வணிகர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி அதிகப்பாதிப்புகுள்ளான பகுதியில் உள்ளவர்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6000மும், 5 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. அதில் மாவட்டத்தில் சிறிய அளவில் பாதிப்பு உள்ள 2லட்சத்து 17 ஆயிரத்து 717 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000ம் வழங்கப்படுகிறது. மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையாக பணியாற்றி வருகின்றனர். விஜயகாந்த் மறைவு என்பது தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகும். காரணம் அவர் திரைப்பட துறை மட்டுமின்றி அரசியலிலும் அவர் சாதனை படைத்தார். சாதாரண சாமானிய மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். தமிழ் பற்றுக்கொண்டு நல்லமுறையில் பணியாற்றியவர் விஜயகாந்த். அவரது இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பாகும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் அபுல்ஹாசன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, உணவு பொருள் வழங்கல் தாசில்தார் ஜான்சன், தாசில்தார் பிரபாகர், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர் அதிஷ்டமணி, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பு, வட்டச்செயலாளர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டம் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டு பகுதிகளிலும் தொடங்கி வைக்கப்பட்டது.

