மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது வீட்டிலேயே சமைத்து உணவுகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை வழங்கி திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி.
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின் இல்லத்தில் கடந்த 6 நாட்களாக விடிய விடிய உணவு சமைக்கப்பட்டு, இந்த உணவுகள் 4 மாவட்டங்களுக்கும் தொடர்ந்து வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. உணவுடன் சேர்த்து தண்ணீர் பாட்டிகளும் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, பள்ளிக்கரணை, வேளச்சேரி, புளியந்தோப்பு, சோழிங்கநல்லூர், ராயப்பேட்டை, விருகம்பாக்கம், மயிலை ரோட்டரி நகர், விவேகானந்தர் இல்லம், அண்ணா நகர், ராயபுரம், ஆர்.கே.நகர், ஓட்டேரி, அத்திப்பட்டு, பழவேற்காடு, பாலவாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை, மணப்பாக்கம் மேற்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது.

கனிமொழி கருணாநிதி எம்.பி.யின் சென்னை சிஐடி காலனி இல்லத்தில் வெரைட்டி ரைஸ்கள் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களுக்கு வெரைட்டி ரைஸ்கள் சமைக்கப்பட்டு வேனில் எடுத்துச்செல்லப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டன. கனிமொழி எம்.பி.யின் சொந்த செலவில், தனிப்பட்ட முயற்சியில் இது முன்னெடுக்கப்பட்டன.
இதற்காக 30-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் கனிமொழியின் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு உணவுகளை சமைத்தனர். கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு என சத்தான காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. பிறகு இந்த உணவுகள் தனித்தனியாக பார்சல்கள் செய்யப்பட்டு வேன்கள், ஆட்டோக்கள் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவுடன் சேர்த்து, அடிப்படைத் தேவைகளுக்கு பயன்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, ரொட்டி, பிஸ்கட், போர்வை, பாய், துண்டு, கொசுவர்த்தி சுருள், சிறுவர்களுக்கான உடை, பெரியவர்களுக்கான உடை, புடவை, நைட்டி, மாணவர்களுக்குத் தேவைப்படும் நோட், குழந்தைகளுக்கான பால் பவுடர் ஆகியவற்றைக் கனிமொழி எம்.பி வழங்கினார்.

