திமுக 1949 செப்டம்பர் 15ல் சென்னை ராபின்சன் பூங்காவில் உதயமான நாட்களுக்கு பிறகு கட்சியின் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டுக்கும் மிகப்பெரிய பங்காக இளைஞரணி திகழ்ந்து வருகிறது. 1960ம் ஆண்டுகளின் இறுதியில் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்த அமைப்பின் பேரில் பல கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அது கட்சியின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை.
இந்தநிலையில் 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்கா திமுக இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது. 1980ம் ஆண்டின் மத்தியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த இளைஞரணி அமைப்பின் துவக்கம் திமுக கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த துவக்க விழாவின் போது முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.எஸ்.தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், துரைமுருகன், தா.கிருஷ்ணன், காவேரி மணியம், தங்கப்பாண்டியன், வைகோ, பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் உள்ள பல அணிகளில் இளைஞரணி மிக சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்தது. திமுகவின் பல்வேறு பேரணிகளில் சீருடைகளுடன் திமுக இளைஞரணியினர் பங்கேற்றனர். இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றிய காலத்தில் ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ-வாகவும் பின்னர் சென்னை மேயராகவும் பணியாற்றி கட்சியில் பொருளாளராகவும், 2006ல் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், கட்சியின் செயல் தலைவராகவும் பணியாற்றிய மு.க.ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 வயதை தாண்டிய நிலையிலும் திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலினே பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப்போக்கில் திமுகவில் இளைஞரணிக்குத் தான் முக்கிய பங்கு வழங்கப்பட்டது. அதன்பின் கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகளை வரைமுறைப்படுத்தி மாணவரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணி என 23 அணிகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சராகவும், திமுக தலைவராகவும் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் மாநில இளைஞரணி பொறுப்பை யார் வசம் ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு திமுகவின் பெரும்பான்மையான நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினை பரிந்துரைத்ததன் பேரில் மாநில இளைஞரணி பொறுப்பை ஸ்டாலின் உதயநிதிக்கு வழங்கி, 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அதில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ-வாக பல காலம் பணியாற்றி, பின் தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். திமுகவின் கொள்கை பிரச்சார கூட்டத்தில் நட்சத்திர பேச்சாளராகவும் விளங்கி வருகிறார்.
இந்நிலையில் மாநில திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திருப்பு முனை மாநாடாக அமையும் வகையில் அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை களமிறங்கி பணியாற்றி வந்தாலும், திமுக இளைஞரணியின் செயலாளராக உள்ள உதயநிதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த விழாவில் பேசும் போது: இங்கு நான் கலைஞரின் பேரனாகவும், உங்களிடம் உங்கள் பேரனாகவும் ஆசீர்வாதம் வாங்க வந்துள்ளேன். இந்த கட்சியின் வளர்ச்சிக்கும் ஆட்சியில் இருப்பதற்கும் அடித்தளமிட்டதே நீங்கள் தான். உழைத்து கட்டமைப்பை உருவாக்கி கலைஞரோடு இணைந்து பணியாற்றியவர்கள் நீங்கள். தலைவர் வழியில் பயணிக்கும் நான், எக்கால கட்டத்திலும் திமுகவின் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் தடம் மாறாமல் கலைஞர் வழியில் தளபதியார் பணியாற்றி வருகிறார். தேசிய தலைவர்களின் நட்போடு மாநில கொள்கைகளையும் உரிமைகளையும் மீட்டெடுப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். இந்நிலையில் 2வது இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற இருக்கிறது. இது நமக்கு திருப்பு முனை மாநாடாக அமையும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமிடும் வகையில் அனைவரும் இணைந்து பணியாற்றி மாநாட்டை வெற்றிப் பெற செய்ய உழைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் உதய நிதி ஸ்டாலின் எழுச்சியுரையாற்றி வருகிறார்.
அனைத்து மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளும் சுட்டெரிக்கும் சூரியனுடன் கொட்டும் மழையில் குடை பிடித்துக் கொண்டு சேலத்தில் அணி திரள உழைத்து வருகின்றனர்.

