தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடாதென மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் இரவு-பகல் பாராது மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டார்.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளான வண்ணார்பேட்டை, சகாயமாதா பட்டணம், சிலுவைபட்டி, ராயல் மஹால் தெரு, தாளமுத்துநகர், புதிய முனியசாமிபுரம், சமர்வியாஸ்நகர் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான பகுதிகளை பஞ். தலைவர் சரவணக்குமார் நேரில் பார்வையிட்டார். பின்னர், மழைநீரை விரைவாக அப்புறப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டும், தற்காலிக வாய்கால் அமைத்து வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டும், சகாயமாதா பட்டணம் வடிகால் சீரமைப்பு பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் சரவணக்குமார் கூறுகையில்: மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன் வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது. மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை உடனடியாக அகற்றும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, இந்த பகுதியில் சண்முகையா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டு போர்கால அடிப்படையில் பணிகளை விரைந்து செய்து, தேவைப்படும் இடங்களில் சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். செய்து கொடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளேன். மக்கள் நலன் தான் எனக்கு முக்கியம் என்று பணியாற்றுகிறேன் என்று கூறினார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமாரை கிராம மக்கள் மனதார பாராட்டினர்.
இந்த ஆய்வின் போது, தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், சேசுராஜா மற்றும் கௌதம் உள்பட பலர் உடனிருந்தனர்.

