தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி திருமணம், விருந்து நிகழ்ச்சிகள், இறப்பு நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தகவல் பெறப்பட வேண்டும்.

நிகழ்ச்சி நடைபெறும் நாளில், பறக்கும் படை அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய்த்துறை மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்த நிகழ்ச்சிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது, அரசியல் கட்சியினர் பணம், பரிசு கொடுக்கிறார்களா? என்பதை கண்காணிப்பது மட்டுமின்றி, கரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிந்து உள்ளார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 வரை அபராதம் விதிக்க வேண்டும். மேலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


