தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பழைய பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகள் நிலையத்துக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து பேசினார்கள். அப்பொழுது அவர்களிடம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து செல்வதற்கு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்திருந்தார். இதனையடுத்து காலை முதல் அண்ணா பழைய பேருந்துநிலையத்திலிருந்து மினிபஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் நாட்டுமக்கள் நலன் தான் முக்கியம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக வை பொறுத்தவரை சொல்வதை நிச்சயமாக செய்வோம் சொல்லாதவற்றை மக்கள் நலன் கருதி பல திட்டங்களை நிறைவேற்றுவோம். என்றும் மக்களுக்காக உழைக்கும் கட்சியாக திமுகவும் தமிழக அரசு இருந்து வருகிறது. அதன் படி பழைய பேருந்துநிலையத்தில் மினிபஸ்இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

