உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்ததாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தசரா திருவிழாவின் 10-ம் நாள் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தென்னிந்தியாவிலேயே மிக அதிகம் பக்தர்கள் கூடும் இந்த திருவிழாவிற்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதை கண்டுகளித்து பக்தியுடன் வழிபட்டனர். பல லட்சம் பக்தர்கள் கூடிய இவ்விழாவில் 2,500 போலீசார் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டு, எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் மிக சிறப்பாக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் ‘மாற்றத்தை தேடி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ‘ஜாதிய அடையாள அழிப்பு” புரட்சியை, மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தியதன் தாக்கம் இந்த தசரா திருவிழாவிலும் எதிரொலித்தது மிகவும் போற்றத்தக்க ஒன்றாக இருந்தது. இதில் பக்தர்களோ அல்லது எந்த தசரா குழுவினரும் ஜாதிய அடையாளங்களோடு, உடை உடுத்தியோ, எவ்வித ஜாதி சின்னத்துடனும் வராமல் பக்தி மார்க்கமாக மட்டுமே வந்திருந்தது மிகவும் வரவேற்கதக்கது.

அதே போன்று இத்திருவிழாவிற்கு சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள், பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்தனர். அதற்கேற்ப வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததால் சூரசம்ஹாரம் முடிந்து, அங்கிருந்து ஒரே நேரத்தில் அலை அலையாக திரும்பிய பக்தர்கள் கூட்டம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்காமல் வெகுவிரைவில் திரும்பிச் சென்றனர்.
தசரா திருவிழாவின் நிறைவு நாளில் விரதம் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், தங்கள் காப்புகளை கழற்றி அருள்மிகு முத்தாரம்மனை தரிசித்து சென்றனர். இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் பணியில் ஈடுப்பட்ட போலீசாரை பொதுமக்கள் பலர் பாராட்டிச் சென்றனர். அவர்களோடு இணைந்து நமது போலீஸ் செய்தி நியூஸ் சேனலும் காவல்துறைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
செய்தி தொகுப்பு: எம். ஆத்தி முத்து

