நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு மற்றும் நாகப்பட்டினம் (இந்தியா)- காங்கேசந்துறை (இலங்கை) பயணியர் படகு போக்குவரத்து துவங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 20.09.2023. நடைபெற்றது. உடன் கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் எஸ்.நடராஜன் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் உள்ளனர்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 21
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தெரிவித்ததாவது :
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவு துறை மூலம் நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழில் துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது.இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவு பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சார பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்.மேலும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சுங்கத்துறை வெளியுறவு துறை குடிமைத்துறை கப்பல் பேரியக்கத் துறை இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் ஆகியோர் இந்த வரலாற்று சிறப்புமிக்க குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் வட இலங்கை துறைமுகமான காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்க அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்குமாறு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தலைமை செயற்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) பொறிஞர் சந்திரசேகர் மாவட்ட ஊராட்சித்தலைவர் ச.உமாமகேஸ்வரி மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி மாநில துறைமுக அலுவலர் கேப்டன் ம.அன்பரசன் நாகப்பட்டினம் துறைமுக அலுவலர் கேப்டன் ஜோ.மானேக்ஷா செயற்பொறியாளர் (குடிமை) பொறிஞர் க.ரவிபிரகாஷ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

