தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா தலைமை தாங்கினார்.
டாக்டர் மெர்வினோ, மாவட்ட திட்ட அலுவலர் கன்னியம்மாள் ஆகியோர் கரோனா தடுப்பூசி குறித்து விளக்கி கூறினர்.நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், நலக்கல்வியாளர அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விருப்பம் உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் திரளான ஆசிரியர்கள் பங்கேற்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

