தூத்துக்குடி மேலசண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு 250 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடி, ஆவணி மாதப் பண்டிகைகளில் மிகவும் விசேஷமான பண்டிகை வரலட்சுமி நோன்பு மற்ற அம்மன் பூஜைகள் அல்லது நோன்புகள் போல அல்லாமல், வரலட்சுமி நோன்பு கொஞ்சம் வித்தியாசமானது. பெண்கள் அம்மனை அழகாக அலங்கரிப்பது முதல் விரதம் இருந்து பூஜை செய்து நோன்பு கயிறு கட்டிக் கொள்வது வரை, ஒவ்வொரு பகுதியையும் மிகவும் பக்தியோடும், சிரத்தையோடும் செய்வார்கள்.
அந்த வகையில், வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு, தூத்துக்குடி மேல சண்முகபுரம் இந்துநாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் 250 திருவிளக்கு பூஜையில் உலக மக்கள் நன்மை வேண்டி, திருமண தடை, புத்திரபாக்கியம், மழைவளம் பொழிந்து, விவசாயம் செழித்து, நோய் நொடிகள் இல்லாமல் எல்லா செல்வங்கள் பெற்று நலமுடன் வாழ வேண்டி சிறப்பு பஜனைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு கும்பகலசம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

