தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. அதை ஒழுங்குப்படுத்தும் காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியில் மேலூர் இரயில் நிலையம் நடைபாதை அமைக்கப்பட்டு தினமும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் நின்று சென்றது. பொதுமக்களும் பயனடைந்து வந்தனர்.
தற்போது இரண்டு இரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளதால், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் இருபுறமும் நடைமேடை அமைக்கப்பட்டு இரயில்கள் நின்று செல்கின்றன. இதனால்; பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
2-ம் கேட் பகுதியில் இரயில்கள் வந்து செல்லும் நேரங்களில் இரயில்வே கேட் மூடப்படுகின்றன. அந்த சமயத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலக பணியாளர்கள், வியாபாரிகள், பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் அந்த பகுதியில் இரயில்வே கிராஸிங் நடைமேடை அமைத்துத் தர வேண்டுமென்று அமைச்சர் கீதாஜீவனிடம் பல்வேறு பொதுநல அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, செல்வநாயகபுரம், ஆண்டாள் தெரு சந்திக்கும் பகுதியிலிருந்து ஏறி, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, ரஹ்மத்துல்லாபுரம் பகுதியில் இறங்கும் வகையில் இரயில்வே கிராஸிங் நடைமேடை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இரு இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: பயணிகள் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த பகுதியில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்கும் வகையில் மக்கள் நலன் கருதி, மாணவ-மாணவியர்கள், பெண்கள், வியாபாரிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம், என்று கூறினார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின், கவுன்சிலர் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், பாலகுருசாமி, இரயில்வே துணை மண்டல பொறியாளர் முத்துக்குமார், வருவாய்துறை ரம்யா தேவி, நில அளவைபிரிவு சார் ஆய்வாளர் சக்திவேல், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், பிரம்மநாயகம், ஆனந்தன், அந்தோணி முத்துராஜா, மற்றும் கருணா, மணி, அல்பர்ட், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

