தூத்துக்குடி,
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாலு, துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி உள்ளிட்ட உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இளைஞரணி பொறுப்பை வழிநடத்தி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் முதன்மை அணியாக செயல்படுவது இளைஞரணி தான். திமுக கட்சியின் கொள்கைகளை தீவிரமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது கடந்த காலத்தில் ஸ்டாலின் இருந்த காலம் தொட்டு இன்று வரை தொடர்கிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் இளைஞரணி பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவில் பணியாற்றியதையும், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட விவரத்தையும் கேட்டறிந்து, குறிப்பாக அவர்களில் தீவிர களப்பணி ஆற்றுபவர்கள் யார் என்பதை கண்டறிந்தார். அதில் துடிப்புடன் செயல்படும் இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரையின்படி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக அம்பா சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த காலத்தில் இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார்.
தற்போது, அம்பா சங்கர், நான்காவது முறையாக இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 10 வருடம் பணியாற்றிய காலத்தில் துணை தலைவராக பொறுப்பு வகித்தார். சிறிது காலம் பொறுப்பு தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி வளர்ச்சிக்கு தொடர்ந்து தீவிரமாக களப்பணியாற்றி வருவதால், அவரது மனைவி வசுமதிக்கு கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மாப்பிள்ளையூரணியில் போட்டியிட வாய்ப்பளித்து, வெற்றி பெற்ற பின்னர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார்.
அம்பா சங்கர் – வசுமதி தம்பதிகள் இருவரும் இணைந்து கழகமே கோவில் கருப்பு சிவப்பு இருவண்ண கொடிகள் எங்களுக்கு இரு கண்கள் போன்றது, என்று இருவரும் இணைந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி கழக பணியாற்றி வருகின்றனர்.

