தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 19 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கு மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை வழக்கின் எதிரிகளை கைது செய்து சொத்துக்களை கைப்பற்றிய கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் முத்துவிஜயன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார் மற்றும் காவலர் ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 28.02.2021 அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 இருசக்கர வாகனங்களை திருடிய எதிரியை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 2,50,000/- மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தூத்துக்குடி மத்தியபாகம் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், தலைமை காவலர் பழனிசாமி, முதல் நிலை காவலர் உதயகுமார் மற்றும் காவலர் சுடலைமணி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2017ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கின் 2வது எதிரியான காரைக்குடியை சேர்ந்த சோலையப்பன் மகன் சுரேஷ் (46) என்பவர் மீது ஒரு வருடத்திற்கு மேலாக நிலுவையில் இருந்த பிடியாணையை நிறைவேற்றிய மாசார்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் ஜெகதீசன் மற்றும் காவலர் சோலைபாண்டி செல்வம் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கைதிவழிக்காவலில் இருந்து தப்பிசென்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி மாயகிருஷ்ணன் என்பவருக்கு 5 மாதங்கள் கடுங்காவல் தண்டனை பெற்று தந்த புதுக்கோட்டை காவல் நிலைய பெண் தலைமை காவலர் கவிதா என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போலி ரூபாய் நோட்டுக்களை கடத்திய வழக்கில் தூத்துக்குடி ADJ II நீதிமன்றத்தில் 5 வருடங்கள் தண்டனை பெற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பிணையில் சென்று மேற்படி உயர் நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டு 2018 ம் ஆண்டு முதல் தலைமைமறைவாக இருந்த குற்றவாளி மாரிமுத்து (எ) முத்துராம் என்பவரை கைது செய்த சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் இளையராஜா மற்றும் காவலர் கணேசன்; ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாலங்குறிச்சி கிராமத்தில் மசானம் என்பவரின் இருசக்கர வாகனம் மோதி நாய் ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதால் நாயின் உரிமையாளர் பெருமாளுக்கும் விபத்து ஏற்படுத்திய மாசானத்திற்கும் மோதல் ஏற்பட, உடனே சம்பவ இடத்திற்கு சென்று சாமாதானம் செய்து இருவேறு சமுதாயத்தினரிடையே ஏற்பட இருந்த பிரச்சினையை தடுத்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவலர் வீரபெருமாள் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 19 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.இப்பாராட்டு நிகழ்ச்சியின்போது தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.



