தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்கம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு சார்பில் ஒடிசாவில் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி பீச் ரோட்டிலுள்ள எம்பவர் மக்கள் மருந்தக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளருமான ஆ.சங்கர் தலைமை தாங்கினார்.
ஒடிசாவில் நேற்று 5 நிமிட இடைவெளியில் 3 இரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த விதமும் அதில் பயணம் செய்தவர்களின் நிலைமையும், உற்றார்களின் பரிதவிப்பையும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எண்ணிக்கையில் சொல்லப்படும் மரணங்களும், காயங்களும் மனதை துடி துடிக்க வைக்கிறது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவிலேயே தயாரான இரயில் விபத்தை தடுக்க கூடிய கவாக் தொழில் நுட்பம் விபத்து நடந்த இந்த வழித்தடத்தில் பயன்பாட்டில் இல்லாதது இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆடம்பர இரயில்களுக்கு மட்டுமே அக்கறையும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகின்றது. சாதாரண இரயில்கள் அலட்சியம் செய்யப்படுகின்றது என்ற குரல்கள் நாடெங்கும் ஒலிக்கின்றது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்க தலைவர் கல்யாண சுந்தரம், செயலாளர் பிரமநாயகம், பொறுப்பாளர்கள் லெட்சுமணன், ஆனந்தன், அந்தோணி முத்து ராஜா, சமூக ஆர்வலர் கணேசன், எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை, பணியாளர் தீபக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

