தூத்துக்குடி.
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட பெரியநாயகிபுரம் கிராமத்தில் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.
கடந்த மார்ச் 1-ம் தேதியன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணி துவங்கியது. கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டன.
மணி பட்டர் மற்றும் சண்முகம் பட்டர் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் ஒதப்பட்டது. மேலும் அம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
கும்பாபிஷேக நிறைவு விழாவான மார்ச் 3ம் தேதியன்று நான்காம் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பிம்பசுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம், தீபாராதனை, மற்றும் ஸ்ரீபெரியநாச்சி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமான கோபுர கலசத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில்; பெரியநாயகிபுரம் ஊர் பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்பட சுற்றுப்பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.

