நாகப்பட்டினம் பிப்ரவரி 24
நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் டாக்டர் ஜெயரஞ்சன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் ஊடகவியலாளர் கார்த்திகை செல்வன் ஆகியோர் இன்று சொற்பொழிவாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது….
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் நமது மரபின் வளமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும், என்ற நோக்கத்தில் இந்த மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் டாக்டர் ஜெயரஞ்சன் ஊடகவியலாளர் கார்த்திகை செல்வன் பொருளாதாரம், சமூக நீதி மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து சொற்பொழிவாற்றினார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் செழுமையான பண்பாடுகளில், தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது எதிர்கால சமூக கடமையாகும். எனவே கல்லூரிகளில் தமிழர்களின் மரபும், நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு சமூக பொருளாதார முன்னேற்றம் திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி முன்னேற்றமும், தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள் வளர்ச்சியும், கணித தமிழ் வளர்ச்சியும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஆகவே இளம் தலைமுறையினரான மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், தமிழ் மொழியின் மரபு மற்றும் பண்பாடுகளை அறிந்தும் தமிழை வளர்த்து பெருமிதம் கொள்ள வேண்டும் எனவும், மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல், சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை குறித்து கேள்வி கேட்கப்பட்டதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.விஸ்வநாதன் சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட மாணவ-மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

