நாகப்பட்டினம் நவம்பர் 12
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை ஊராட்சியில் உள்ள குமரன் உயர்நிலை பள்ளி, ஆழியூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளி ஆகிய வாக்குச்சாவடி நிலையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை ஆய்வு செய்து தெரிவித்ததாவது.தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை), 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு தினங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குசாவடி நிலையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும்; முகவரி மாற்றம் செய்திட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.


இச்சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6, வாக்காளர் பட்டியலில் வேறொரு நபரின் பெயரை நீக்கல் மற்றும் தன்னுடைய பெயரை நீக்கல் வசிப்பிடம் மாறிய மற்றும் இறப்பு, காரணத்தினால் பெயரை நீக்கக் கோருவதற்கான படிவம்-7-ம், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்காக படிவம்-8, மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவம்-6டீ, ஆகியவைகளை பூர்த்தி செய்து வழங்கிடலாம் எனவே, பொதுமக்கள் சிறப்பு முகாம் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையிலும், மற்ற நாட்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார். தொடர்ந்து நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கோட்டைவாசல் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

