நாகை கிராமப்புற பள்ளியின் மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு கல்லூரி மாணவர்கள்.
நாகப்பட்டினம் ஜூலை 8
பிரான்ஸ் நாட்டில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான ” ENSEEIHT” என்ற பொறியியல் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் தங்களது நலப்பணித் திட்டத்திற்காக ஒரத்தூர் கிராமத்தில் உள்ள சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் 15 நாட்கள் பள்ளி மேம்பாட்டு பணியில் ஈடுபட்டனர்.
கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறந்த ஜூன் 13ஆம் தேதி அன்று 5 பேர் குழு கொண்ட பிரான்ஸ் மாணவர்கள் ஒரத்தூர் பள்ளிக்கு வருகை தந்தனர். பள்ளி மாணவர்கள் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். கோடை விடுமுறையில் துப்புரப் படுத்தப்படாமல் இருந்த பள்ளி வளாகத்தையும் மாணவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானத்தையும் சுத்தப்படுத்தி செப்பனிட்டு தந்தனர்.
மாலை நேரங்களில் மாணவச் செல்வங்களுடன் விளையாட்டு ஈடுபட்டு அவர்களுக்கு புதிய விளையாட்டுகளை கற்றுத் தந்தனர். அவர்களுக்கு தங்கள் நாட்டில் இருந்து கொண்டு வந்த கலர் பென்சில்கள் பலூன் போன்ற பொருள்களை கொடுத்து மகிழ்ந்தனர்.
மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் ஏற்கனவே பாதுகாத்து வளர்த்து வரும் மரக்கன்றுகளை சுற்றி நீர் தேங்கும் வகையில் அழகாக கற்கள் அமைத்துத் தந்தனர்.
ஒரத்தூர் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலமும் கணிதமும் சுவைபடும் விதத்தில் நடத்தி மாணவர்களிடம் உரையாடி மகிழ்ந்தனர். மாணவர்களும் தயக்கம் இன்றி அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்து ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டனர்.



பள்ளியில் கட்டப்படும் சுகாதார வளாகத்தில் கட்டிடப் பணியில் கட்டிட தொழிலாளர்களுக்கு தேவையான கட்டுமான பொருட்களை சேகரித்துக் கொடுத்து தங்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த IDEP தொண்டு நிறுவனம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மேற்கண்ட கல்லூரி மாணவர்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 10ஆம் தேதி தங்கள் நாடு திரும்புகின்றனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

