விளாத்திகுளம், சாத்தான்குளம் பகுதியில் 4 டன் ரேஷன அரிசி கடத்தியதாக 4பேரை போலீசார் கைது செய்து லாரி, லோடு வேனை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக, டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில், விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் விளாத்திகுளம் போலீசார் நேற்று மதியம் விளாத்திகுளம்-குளத்தூர் ரோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

இதில் அந்த லோடு ஆட்டோவில் தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் மொத்தம் 2½ டன் ரேஷன் அரிசியை தூத்துக்குடியில் உள்ள பன்றி பண்ணைக்கு கடத்தி செல்ல முயன்றது
தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லோடு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த லோடு ஆட்டோவில் இருந்த விளாத்திகுளம் அருகே பி.சண்முகாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (26), புளியங்குளத்தைச் சேர்ந்த மணிமாறன் பூபதி (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கவும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிக கிடங்கில் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேபோன்று சாத்தான்குளம் அருகே செட்டிவிளையில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து போலீசார் சோதனை செய்தபோது, அதில் 20 மூட்டைகளில் மொத்தம் 1½ டன் ரேஷன் அரிசியை கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தட்டார்மடம் அருகே கரிசல் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (49), கன்னியாகுமரி களியல் பிள்ளையன் தோட்டத்தைச் சேர்ந்த பால் ஜினோ (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மூடை ரேஷன் அரிசியுடன் லாரியை தட்டார்மடம் போலீஸார் பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த வாரம் கேரளாவுக்கு கடத்த இருந்த 14 டன் ரேசன் அரிசி மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. முறப்பநாடு காவல்துறையினர் உதவியோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தில்லை நாகராஜன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கு முன்தினம் தூத்துக்குடி டவுன் பகுதியில் டிஎஸ்பி கணேஷ் 6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தார். அந்த அடிப்படையில் நேற்று சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் போலீசார் தீவிர வாகன சோதனையில் கேரளாவுக்கு கடத்த இருந்த 4 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒருபுறம் ரேசன் கடத்தல் கும்பல்களை பிடித்து கைது செய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ரேசன் அரிசி கடத்தல் கும்பல்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக தில்லை நாகராஜன் நியமிக்கப்பட்ட பிறகு நாள்தோறும் தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்தல் கும்பல்கள் பிடிபட்டு வருவது பொதுமக்கள் மத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக காவல்துணை கண்காணிப்பாளர் நேரடி பார்வையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரேசன் அரிசி கடத்தல் கும்பல்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது
செய்தி தொகுப்பு: ஆத்திமுத்து