திருச்செந்தூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, கெட்டுப்போன கோழி இறைச்சி, இறால் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த ஓட்டல் மிகுந்த சுகாதாரமற்ற வகையில் இருந்தது. உரிய லேபிள் விவரங்களில்லாத இறால் பாக்கெட்டுகள் 19 கிலோவும், 54 கிலோ பழைய மற்றும் கெட்டுப்போன கோழிக்கறி வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அந்த கோழிக்கறி மற்றும் இறால் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி புதைக்கப்பட்டது. மேலும் அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும், உணவு பாதுகாப்புத் துறை ஆணையரிடமிருந்து அவசரத் தடையாணை பெற்று, கடையின் இயக்கத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதே போன்று மற்றொரு கடையில் சோதனை நடத்திய போது, சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அங்கு உரிய லேபிள் விவரங்கள் இல்லாத 18 கிலோ இட்லிப்பொடி, 20 கிலோ காப்பி தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும் இது தொடர்பான புகார்களை உணவு பாதுகாப்புத் துறையின் 94440 42322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.


