தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் புதிய வகை ஓமிக்கிரான் 4 என்பது செங்கல்பட்டில் ஒருவருக்கு கண்டறியப்பட்டு, தற்போது நலமாக உள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா தொற்றுபற்றி அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் தொற்று இல்லை, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக இறப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளோம். மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக 4000 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற நியமனம் செய்யப்பட்ட 4442 செவிலியர்கள், 2,247 சுகாதார பணியாளர்கள் என 7696 பேருக்கு தற்போது ஊதியம் உயர்த்தி வழங்கபட்டுள்ளது. தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு, குறைப்பது மாநில அரசுகளா என பிற மாநிலங்கள் கேள்வி எழுப்பியுள்ளதையும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மனதில் கொள்ள வேண்டும் என்றார். பேட்டியின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

