தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம், கல்வி துறை, திருச்சபை கிறிஸ்தவர்கள் ஆகியோர்களை பல ஆண்டுகளாக ஏமாற்றிய பேட்ரிக் ஆலய நிர்வாகிகள் மீது
பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலய நலன் விரும்பும் ஐக்கிய அணி தலைவர் இன்ஸ்டீன் பரபரப்பு குற்றச்சாட்டு.
தூத்துக்குடி, மே 14.
தூத்துக்குடியில் பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலய நலன் விரும்பும் ஐக்கிய அணியின் சார்பில் நேற்று செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கூர் பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலய நலன் விரும்பும் ஐக்கிய அணியின் தலைவர் இன்ஸ்டீன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:
தூத்துக்குடி வடக்கூர் தச்சர் தெரு பகுதியில் பேட்ரிக்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி கடந்த 1979ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தமிழக அரசின் கல்வித்துறையால் 1993ம் ஆண்டு தற்காலிக அங்கீகாரம் பெற்று, பின்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் ஒப்புதல் பெற்று நடைபெற்று வருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 600 மாணவ-மாணவியர்களை கொண்டு இயங்கிய இப்பள்ளி நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுகளாலும், பள்ளியை மூடிவிட வேண்டும், கோடிக்கணக்கான மதிப்புள்ள பள்ளிக் கட்டிடத்தையும், குருவானவர் இல்லத்தையும், சேகர அலுவலகத்தையும் தரை மட்டமாக இடித்து விட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்பட்டனர்.
மேலும், 2021-2022ம் கல்வி ஆண்டில் சுமார் 160 மாணவ-மாணவியர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தற்பொழுது 11 ஆசிரியைகளும், 2 ஆசிரியர் அல்லாத இதர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10.12.2019 அன்று அரசின் கல்வித்துறை ஒப்புதல் வழங்கிய தச்சர்தெரு முகவரியில், ஆலய வளாகத்தில் நடைபெற்று வந்த பள்ளியை, பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருக்கிறது என்பதை காரணம் காட்டி, தற்காலிகமாக மாற்றுகிறோம் என்று அறிவிப்பு செய்து விட்டு, உடனடியாக பள்ளியை, பக்கத்தில் திருமண மண்டபமாக செயல்பட்டு வந்த ‘பேட்ரிக்ஸ் ஹாலுக்கு’ மாற்றி விட்டனர்.
தற்காலிகமாக மாற்றுகிறோம் என்று கூறிவிட்டு இன்று வரை 29 மாதங்கள் முடிவு பெற்ற பின்னரும், அரசின் கல்வித்துறை அங்கீகாரம் வழங்கிய இடத்திற்கு மாற்றாமல் காலம் கடத்தி வரும், முன்னாள் தாளாளர் குருவானவர் யோபு ரத்தின சிங் மற்றும் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து நிர்வாகஸ்தர்களாக செயல்பட்டு வரும் தேவராஜன், கோயில்பிச்சை மற்றும் தற்போதைய தாளாளர் குருவானவர் மோசஸ் ஜெபராஜ் ஆகியோரிடம் பேட்ரிக்ஸ் ஆலய சபையை சார்ந்தவர்களும், நலன் விரும்பும் ஐக்கிய அணியை சார்ந்தவர்களும், மாணவ-மாணவியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி பலமுறை மேற்படி நால்வரிடமும் கூறியும், செவிமடுக்க மறுத்து வந்ததோடு, தற்பொழுது திட்டமிட்டபடி, உள்நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக அரசு அங்கீகாரம் வழங்கிய தச்சர் தெரு முகவரியில் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடத்தையும், அலுவலகத்தையும், குருவானவர் இல்லத்தையும் இடித்து தரைமட்டமாக்குவதற்கு தூத்துக்குடி மாநகராட்சியில் விண்ணப்பம் செய்து இருப்பது வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு பள்ளியை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், அதற்காக கல்வித்துறை வகுத்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து, முறையாக விண்ணப்பித்து கல்வித்துறையின் முன்அனுமதி பெற்ற பின்புதான் மாற்ற
முடியும். இதில் அந்த விதிமுறைகளை பள்ளியின் தாளாளரும், நிர்வாகஸ்தர்களும் 29 மாத காலம் கடைப்பிடிக்காமல், விதிகளை மீறி நடந்துள்ளது தெரிகிறது.
மேலும், மாணவ-மாணவியர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் கருதாமல் ஒட்டு மொத்தமாகவே பள்ளியை மூடி விட முடிவு செய்துவிட்டார்களோ? என்ற ஐயப்பாடும் எழுகிறது. காரணம் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல், பெற்றோர்களையும், கல்வித்துறையையும் ஏமாற்றி வருகின்றனர். இதுவும் கல்வித்துறையின் விதிகளுக்கு முரணானது. கல்வித்துறையின் விதிகளின்படி அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் பள்ளியை தொடர்ந்து நடத்தினால் ஒரு நாளைக்கு ரூ.10,000ஃ- என்று அபராதத் தொகை விதிக்கப்படுமேயானால், அதற்கு மேற்கண்ட நான்கு பேர் மட்டுமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதாவது ஏற்படுமாயின் அதற்கும் அந்த நால்வருமே பொறுப்பாவர்கள்.
தற்காலிகமாக மாற்றப்பட்டு, பேட்ரிக்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நடைபெறும். திருமண மண்டபம் மாணவர்களுக்கு பாதுகாப்பானது இல்லை. கும்பகோணம் தீ விபத்திற்கு பிறகு அரசும், கல்வித்துறையும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விதிமுறைகளை வகுத்து, அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. அதன்படி திருமண மண்டபத்தின் முகப்பில் ஒரே ஒரு வாசல் மட்டுமே உள்ளது. இருவழி பாதை கிடையாது. மாணவ-மாணவியர்களின் நலன் கருதி கல்வித்துறையானது, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் தரைத் தளத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டு உள்ளது. காரணம் இங்கு முதல் தளத்தில் சில வகுப்புகள் இயங்கி வருகிறது. இதுவும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல.
ஆகவே, அங்கீகாரத்தை புதுப்பிக்காமல், அரசின் கல்வித்துறையில் முன் அனுமதி பெறாமல், விதிகளை மீறி செயல்பட்டு வரும் பேட்ரிக்ஸ் பள்ளியின் மீது கல்வித்துறை உடனடி கவனம்
செலுத்தி, கல்வித்துறை எந்த முகவரியில் பள்ளி செயல்பட அங்கீகாரம் அளித்ததோ அதே இடத்தில் மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்வதோடு, விதி மீறல்களில் ஈடுபட்ட குருவானவர் யோபு ரத்தினசிங், குருவானவர் மோசஸ் ஜெபராஜ், நிர்வாகிகள் தேவராஜன், கோயில் பிச்சை மற்றும் 29 மாத காலம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்ட நிலையில் தனது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மறைத்ததோடு, அரசு அலுவலர் என்பதை மறந்து பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலரும், தற்போது வட்டார கல்வி அலுவலராக இருந்து வரும், மு.ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர் உட்பட ஐந்து நபர்கள் மீதும், குற்ற வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மேலும் தற்காலிகமாக பள்ளியை மாற்றியுள்ள திருமண மண்டபம், ஏழை எளியவர்களுக்கு திருமண சுப காரியங்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டும் என்றும், செவித்திறன் இல்லாதோர், வாய்பேச முடியாதோர், கண் பார்வையற்றோர் ஆகிய அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் இடமாகவும், மாணவர்களுக்கு நல்லொழுக்க பாடங்களை நடத்தும் இடமாகவும், செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில், அன்றைக்கு தூத்துக்குடி நகர்மன்ற தலைவராக இருந்த என்.பெரியசாமி அவர்கள் கிறிஸ்தவ சிறுபாண்மையினரின் நலன்கருதி மேற்படி திருமண மண்டபத்திற்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டார்கள்.
ஆனால், நிர்வாகஸ்தர்கள் நகர்மன்ற உத்தரவை மதிக்காமல் கிறிஸ்தவர்களிடம் கடந்த 30 ஆண்டுகளாக நன்கொடை என்ற பெயரில் பல ஆயிரங்களை வசூல் செய்து ஏமாற்றியதோடு இதுவரை எந்த ஏழை-எளியவர்களுக்கும் சுப காரியங்கள் நடத்துவதற்க்கு இலவசமாக கொடுக்காமல், மாநகராட்சியை ஏமாற்றி வரிஏய்ப்பு செய்திருக்கிறார்கள். மேலும், 29 மாதங்களுக்கு முன்னால் பேட்ரிக்ஸ் மழலையர் தொடக்கப்பள்ளியை திருமண மண்டபத்திற்கு மாற்றி அதையும் மாநகராட்சிக்கு தெரிவிக்காமல் நிர்வாகஸ்தர்களாக தொடர்ந்து இருந்து வரும் தேவராஜன், கோயில்பிச்சை மற்றும் பள்ளி முன்னாள், இன்னாள் தாளாளர்கள், யோபு ரத்தினசிங், மோசஸ்ஜெபராஜ் ஆகியோர் வரிஏய்ப்பு செய்துள்ளார்கள்;. ஆகவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஐக்கிய அணியின் தலைவர் இன்ஸ்டீன் தெரிவித்தார்.
பேட்டியின் போது, திருமண்டல செயற்குழு உறுப்பினர் பாக்கியராணி, பெருமன்ற உறுப்பினர்கள் ஜாண் வாசக், டேவிட்நோவா, சேகர மன்ற உறுப்பினர்கள் எடிசன் சாமுவேல், குமாரமணி, ஐசன்பாபு, பெயித்ராஜ் பிரபாகரன் பால், ஜெபசிங், ஜெலினா, டெல்சி ஜெபமணி, ரூபன்மனோஜ், பிரவின் மேஷாக், இரட்சண்யபுரம் சேகர உறுப்பினர்கள் ஜான் வெஸ்லி, ஏசுதாஸ் மற்றும் பரிசுத்த பேட்ரிக்ஸ் பேராலய நலன் விரும்பும் ஐக்கிய அணியின் செயலாளர் ஞானதுரை, பொருளாளர் மனோகர், ஜெபராஜ், ஆடிட்டர் சாமுவேல், ஞான்ராஜ்விக்டர், அல்பர்ட் சுந்தர்சிங், அமல்ராஜ், இன்பம், எட்வர்ட், கிருபாகரன்ஜோசப், பாலசிங், ஆனந்தராஜ், ஆன்ட்ரூடெரிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

