இலங்கை மீனவர்கள் அட்டூழியம் – 3 படகுகளில் இருந்த 9 தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் அபகரிப்பு.
வேதாரணியம் ஏப் 20
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை படகு துறைமுகத்திலிருந்து நேற்று ஏராளமான படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. மீன்பிடி தடை காலத்தில் பெரிய படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் வேளையில் சிறிய பைபர் படகுகள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகிறது. இந்நிலையில் ஆறுகாட்டுத்துறையிலிருந்து ராசப்பன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுமுகம், ஜீவன்ஸ் , சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சங்கர், குமார், கார்த்திகேயன் ஆகியோரும் தோப்புத்துறையைச் சேர்ந்த காதர் உசேன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ரமேஷ், நல்லதம்பி, காளிதாஸ், அருள்செல்வன் ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று மாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடிக்கரை தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வந்த இலங்கை மீனவர்கள் 3 படகுகளில் இருந்த மீனவர்களை வாள், கட்டைகளுடன் வந்து தாக்கினர் . மேலும் படகுகளில் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், பேட்டரிகள், டார்ச் லைட்டுகள், ரெயின் கோட் , டீசல் மற்றும் மீன்களை அள்ளி சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் இன்று அதிகாலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து நடந்த சம்பவங்களை மீனவ பஞ்சாயத்தார்களிடம் தெரிவித்தனர். கடலில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை தாக்கும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

