தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள லே செயலாளர் டி.கிப்ட்சன் தலைமையிலான நிர்வாகத்தின் சார்பில் 30.10.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருமண்டலம் முழுவதும் உள்ள குருமார்கள் அடங்கிய கூட்டம் வட்டக்கோயில் எபனேசர் ஆலயத்தில் நடைபெற இருப்பதாக, 28.10.2021 அன்று சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு போட்டியாக, பிரதம பேராயரின் உத்தரவு இன்று வந்த நிலையில் அதையும் மீறி, தூத்துக்குடி-நாசரேத் திருமண்;டல பேராயர் தேவசகாயம் திருமண்டல குருமார்கள் அடங்கிய கூட்டத்தை சண்முகபுரம் தூய.பேதுரு ஆலயத்தில் அதே தினமான 30.10.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுவதாக 29.10.2021 இன்று அறிவிப்பு செய்திருக்கிறார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே குருமார்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவசரகதியாக, இன்று திடீரென போட்டி கூட்டமாக பேராயர் தேவசகாயம், அதே தினத்தில் குருமார்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது, திருமண்டல சபையார் மத்தியிலும், குருமார்கள் மத்தியிலும்; அதிர்ச்சியையும், இன்னும் பிரதம பேராயரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பேராயர் நடக்கவில்லையோ என்ற வினாவும் எழுந்துள்ளது.
திருமண்டல குருமார்கள் பிரதம பேராயரின் உத்தரவை ஏற்று செயல்படுவார்களா? அல்லது பேராயர் தேவசகாயத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட போகிறார்களா? குழப்பமான நிலையில் குருமார்கள் இருப்பதாக தெரியவருகிறது. மேலும், நாளை இரண்டு இடங்களிலும் நடைபெற உள்ளதாக கூறப்படும் கூட்டங்களை முழுமையாக பிரதம பேராயர் அலுவலகம் கண்காணிக்க இருப்பதாக தெரியவருகிறது. குருமார்களின் நிலைபாடு என்ன? என்பது குறித்து திருமண்டல மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

