தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவன உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் இலவச செட்டாப் பாக்ஸ்களை ஆக.26க்குள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும், அல்லது செட்டாப் பாக்ஸ்களை மேற்படி தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நல்ல தரமான முறையிலும் குறைந்த கட்டணத்திலும் டிஜிட்டல் மூலம் ஒளி பரப்புவதற்காக அரசு கேபிள் டிவி நிறுவன உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களிடம் வழங்கப்பட்ட இலவச செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கி செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அவ்வாறு செயலாக்கத்தில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை திரும்ப சம்பந்தப்பட்ட அரசு டிஜிட்டல் விநியோகஸ்தரிடமோ அல்லது அரசு கேபிள் டிவி நிறுவன தனி வட்டாட்சியரிடமோ ஒப்படைத்திட பதிவு தபால் மூலமும், தொலைபேசி மூலமும் பலமுறை சம்பந்தப்பட்ட உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், திரும்ப ஒப்படைக்கப்படாத செட்டாப் பாக்ஸ்களுக்கான மதிப்பு தொகையினை அரசுக்கு செலுத்தும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட அறிவிப்புகளை உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் பெற்றுக் கொண்டு இந்நாள் வரை செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கத்திற்கு கொண்டு வரவில்லை. அவற்றை திரும்ப ஒப்படைக்கவும் இல்லை. எனவே, நிலுவையில் உள்ள அனைத்து செட்டாப் பாக்ஸ்களும் 26.08.2021-க்குள் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், பின்னர் நிலுவையில் உள்ள செட்டாப் பாக்ஸ்களை மேற்படி தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லை எனில் செட்டாப் பாக்ஸ்களுக்கான மொத்த தொகையினையும் பாக்ஸ் ஒன்றுக்கு ரூ.1,725.26 வீதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லையெனில் நிலுவையிலுள்ள செட்டாப் பாக்ஸ்களை காவல் துறை மூலம் கைப்பற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் பகுதியில் தகுதியான வேறு உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

