ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி – வினா போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லலாம் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் 23.07.2021 முதல் தொடங்கி 08.08.2021 வரை நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து மேஜைப்பந்து போட்டியில் ஜி.சத்தியன், ஏ.சரத்கமல், வாள் சண்டையில் சி.ஏ.பவானிதேவி பாய்மரப்படகு ஓட்டுதல் போட்டியில் கே.சி.கணபதி, வருண் தக்கர், நேத்ரா குமணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டோக்கியோவை நோக்கிச் சாலை என்ற தலைப்பில் ஒலிம்பிக் விநாடி வினா போட்டிகள் இணையதளம் மூலம் 23.06.2021 தொடங்கியுள்ளது. இந்த விநாடி வினா போட்டி 22.07.2021 நடைபெறும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வயதினரும் hவவிள:கவைiனெயை.பழஎ.in என்ற இணையதளம் மூலம் தனித்தனியாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பங்கேற்கலாம்.
விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெறுபவர்கள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் தன்பட அரங்கில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.மேலும் வெற்றி பெற்றவர்கள் எடுக்கப்பட்ட புகைப்படத்தை விளையாட்டரங்கத்தில் உள்ள விளையாட்டு அலுவலகத்தில் சமர்பித்தால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே விநாடி – வினா போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து வயதினரும் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.

