விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் மனைவியை எரித்து கொன்ற கணவர் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
24.04.2021 அன்று விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கல்மேடு பகுதியிலுள்ள முள்காட்டில் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி (43) மனைவி முருகலெட்சுமி (36) என்பவரை அவரது கணவர் முனியசாமி மற்றும் அவரது சகோதர்களான தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன்கள் சங்கர் (29), நீலமேகம் (28), சுப்புராஜ் (எ) பொன்ராஜ் ஆகியோர் தீயிட்டு எரித்து கொலை செய்த வழக்கில் தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர், நீலமேகம், சுப்புராஜ் (எ) பொன்ராஜ் மற்றும் முனியசாமி ஆகியோரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அறிவுரையின் படி தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. முருகன் அறிக்கையின் அடிப்படையில் 4 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.*
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி 4 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்கள். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் எதிரிகள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.


