ஓராண்டு கால நன்னடத்தை உறுதி மொழியை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட ரவுடிக்கு 322 நாட்கள் சிறையில் அடைத்து அடையாறு துணை ஆணையர் விக்ரமன் உத்தரவிட்டார்.
சென்னை, பெசன்ட்நகர், ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் ஹிஸ்டரி ஷீட்டில் பெயர் உள்ளது. மேலும் கொலை முயற்சி வழக்கு, போக்சோ உட்பட 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறை சென்றவர். பிரசாந்த், கடந்த மார்ச் மாதம் 6ம் தேதியன்று அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும்
ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் கடந்த 18ம் தேதியன்று பழனி என்பவரை தகாத வார்த்தைகளால் பேசி, கருங்கல்லால் தலையில் தாக்கி இரத்தக் காயம் ஏற்படுத்தியது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசாரால் பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.
ஒரு வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதிக் கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை பிரசாந்த் மீறியதால் செயல்முறை நடுவர் மற்றும் அடையாறு துணை ஆணையர் விக்ரமன், பிரசாந்த் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். அதன்படி குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110ன் படி நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட 43 நாட்கள் கழித்து, மீதமுள்ள 322 நாட்கள் ஜாமினில் வெளிவர முடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதன்பேரில் பிரசாந்த் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


