தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஏப்ரல் 7-ஆம் தேதிக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பாதித்தவர்கள் இருக்கிறார்களா என்று ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் நாளை வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
வாக்குச்சாவடியில் முகக்கவசம் வழங்குவார் என்று யாரும் நினைக்கவேண்டாம். தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அச்சம் தரும் வகையில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளார். கரோனா பாதித்த நோயாளகிள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம். கரோனா நோயாளிகளுக்கு தற்பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

