பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் குருமகாலிங்கேஸ்வரருக்கு மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி, மார்ச், 4
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் வளாகத்தில் எழுந்தருளியுள்ள குருமகாலிங்கேஸ்வரருக்கு மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக விழா நடைபெற்றது.தென்தமிழகத்தில் தனிச்சிறப்புடன் சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக அருள்பாலித்து வருவது இத்தலத்தின் சிறப்பாகும். மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை குருமகாலிங்கேஸ்வரருக்கும் நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன.பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் நடத்தப்பட்டு மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
