தூத்துக்குடி, ஜூலை,26.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நாளை (26.07.2024) கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 05.08.2024 அன்று வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (25.07.2024) தூய பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள ஸ்னோ மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இத்திருவிழாவை முன்னிட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் இத்திருவிழாவில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினர்.

இந்த திருவிழாவில் திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ரகசியமாக கண்காணிக்க ஆண் மற்றும் பெண் போலீசார் சாதாரண உடையில் பொதுமக்களோடு மக்களாக கலந்து ஆங்காங்கே தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஆங்காங்கே சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி உட்கோட்டம் லோகேஸ்வரன், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு செந்தில் இளந்திரையன், கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் ராஜாராம், கயத்தார் காவல் ஆய்வாளர் சுகாதேவி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தென்பாகம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

