தூத்துக்குடி.
தமிழகத்தில் 10-வது மாநகராட்சியாக 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் மு.கருணாநிதி, தூத்துக்குடி ஊராட்சி பகுதியாக இருந்த முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, மீளவிட்டான், சங்கரபேரி, தூத்துக்குடி ரூரல் ஆகிய பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சியின் முதல் மேயராக கஸ்தூரி தங்கம் பொறுப்பேற்றார். மேயர் சிம்மாசனத்தில் மறைந்த பெரியசாமி தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்த 133 பவுன் தங்க செயினை அணிந்து கொண்டு கஸ்தூரி தங்கம் அமர்ந்தார்.
அதன்பின் 2011-ல் 60 வார்டுகளை கொண்ட முறையான தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு சசிகலா புஷ்பா மேயராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பின் மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் துணை மேயராக இருந்த சேவியர் பொறுப்பு மேயராக பணியாற்றினார். அதன்பின் நடந்த இடைத்தேர்தலில் அந்தோணி கிரேஸி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று பணியாற்றினார். அவரது பதவிக்காலம் முடிந்த பின் பல ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த காலத்தில் அனைத்து துறைகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளின் முழு ஆதிக்கத்தில் மாநகராட்சி செயல்பட்டது.
2021-ல் நடைபெற்ற தேர்தலின் போது திமுக கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்று தமிழக முதலமைச்சராக மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் 2022-ல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் முழுமையாக திமுக ஆட்சியில் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி தூத்துக்குடி மாநகராட்சி உள்பட 20 இடங்களில் மேயராக திமுகவை சேர்ந்தவர்களும், 1 இடத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் என மேயர் பதவியில் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியானது இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் தொழில் நகரமாக விளங்கி வருவது மட்டுமின்றி, சாலைவழி, வான்வழி, கடல்வழி, ரெயில்வே என நான்கு கட்டமைப்புகளும் உள்ளடக்கிய துறைமுக பகுதியாகும். அனைத்து தரப்பினரும் வாழும் இந்த மாநகராட்சிப் பகுதியில் பணி செய்வது என்பது எளிதல்ல. பல சவால்களையும் கடந்து தான் சாதனை படைக்க முடியும் என்ற வரலாறு முந்தைய காலத்திலேயே இருந்தது உண்டு.
நகர்மன்ற தலைவராக மறைந்த பெரியசாமி இருந்த காலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுப்பதற்கு திணறிய காலங்கள் உண்டு. தனது சொந்த பணத்தை கொடுத்து விட்டு பிறகு அதை சீர் செய்வார். இது தான் ஒரு நிர்வாக திறமைக்கான அடையாளம். அவரது வழியில் இன்று மேயராக பொறுப்பேற்று பணியாற்றும் ஜெகன் பெரியசாமி இதையெல்லாம் கடந்த காலங்களில் தந்தையோடு இருந்து பணியாற்றிய அனுபவ அறிவாற்றலால், மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நிலைப்பாடுகளையும் முழுமையாக தெரிந்தவர்.
தான் பதவியேற்றவுடன் பல கூட்டங்களில் இந்த பொறுப்பு எனக்கு தமிழக முதலமைச்சர் தளபதியார் வழங்கியுள்ளார். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன். அதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். தவறு எங்கு நடந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அதில் குறுக்கீடுகள் எந்த வழியில் வந்தாலும் அதை எதிர்கொண்டு சவால்களையும் சந்திப்பேன், என்று சபதமேற்று பணியாற்றி வருகிறார். மாநகராட்சியின் வரைபடத்தில் 152 பூங்காக்கள் இருக்க வேண்டும். ஆனால் 41 பூங்காக்கள் தான் இருக்கின்றன. 111 பூங்கா இடங்களை தனியார்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் பாரபட்சமின்றி அதை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். மாமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமியின் அதிரடி நடவடிக்கையால் மில்லர்புரத்தில் ஒரு கட்சி பிரமுகர் ஆக்கிரமித்து வைத்திருந்த 21 செண்ட் இடம் மீட்கப்பட்டது. தாளமுத்து நகரில் 8½ ஏக்கர் இடம் மீட்கப்பட்டது. உப்பாத்து ஓடை பகுதியில் தொழிலதிபரிடமிருந்து 2½ ஏக்கர் இடம் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக பல இடங்கள் சிறிய அளவில் மீட்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2ம் தேதி ராம் நகர் பகுதியில் ஒரு ஏக்கருக்கும் கூடுதலான இடம் மீட்கப்பட்டுள்ளது. புஷ்பா நகரில் பல செண்ட் இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. முத்தம்மாள் காலனி பகுதியில் 20 செண்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. அரசினர் பாலிடெக்னிக் அருகில் 93 செண்ட் இடம் மீட்கப்பட்டு அப்பகுதி விரிவாக்கத்துடன் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று பல அரசு இடங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட உள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட பல இடங்கள் மீட்கப்பட உள்ள நிலையில் இதுபோன்ற இடங்கள் அனைத்தையும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு தாரை வார்த்தது யார்? ஏழைக்கொரு நீதி? வசதிபடைத்தவருக்கு ஒரு நீதியா? ஒரு அரசு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்றால், ஒரு மனிதனுக்கு இரண்டு கண், இரு காதுகள் எப்படி முக்கியமோ அதேபோல் அரசு துறை அதிகாரிகளும், அலுவலர்களும், அரசியல் கட்சியினருடன் இணைந்து பணியாற்றினால் தான் மக்கள் நலத்திட்டங்கள் முழுமை பெறும். இருபக்கமும் அன்பு இருந்தால் மட்டுமே காதல் மலரும். அந்த காதல் தொடர்ந்தால் மட்டுமே மாநகராட்சி வளர்ச்சிடையும்;. இதற்கு கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கமா? மாநகராட்சியா? பொறுத்திருந்து பார்ப்போம்.

