நாகப்பட்டினம் மே 2
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சிக்குட்பட்ட வவ்வாலடி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ்,
உள்ளார்.
இக்கூட்டத்தில்; மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராமசபா கூட்டமாகும். கிராமசபா கூட்டத்தில் கிராம மக்களுக்கு அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்து கருத்தரியும் கூட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். இதுவரை நாம் என்ன பயனடைந்திருக்கிறோம், இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தை பொருத்தவரை மக்களே மக்களுக்கு தேவையான விஷயங்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக செயல்படுத்திக்கொள்வது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த வருடம் 100 நாள் வேலையில் என்ன திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதையும், இந்த கிராமசபா கூட்டத்தில் கூறப்படுகின்ற திட்டத்தில் உங்களுடைய அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம். கிராம ஊராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு மூலமாக குழந்தைகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்துதல் வேண்டும்.

இந்த வவ்வாலடி கிராமத்தை நீர்நிறைந்த கிராமமாக உருவாக்கவேண்டும். அதற்கு இக்கிராமத்தில் உள்ள குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது மற்றும் பண்;ணை குட்டைகள் அமைப்பதன் மூலமாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட முடியும். நமக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நீர்வளத்தை பாதுகாத்திடவேண்டும். கிராமத்தை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். சுகாதாரம் என்பது வீட்டிலிருந்த தான் ஆரம்பம் ஆகிறது. அனைவரும் குப்பைகளை குப்பை தொட்டில் போட வேண்டும். கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிலும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒரு குற்றம் ஆகும். அனைவரும் சுத்தமான பசுமையான கிராமமாக மாற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் கைபேசியில் இணையதள விளையாட்டுகள் விளையாடும் பொழுது ஏற்படும் கால விரையம் மற்றும் பொருள் விரையம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் மலம் கழிக்க கூடாது, கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து எங்கள் கிராமம், எழில்மிகு கிராமம் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர். மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மற்றும் குளம் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இக்கிராம சபா கூட்டத்தில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) சௌந்தரராஜன், நாகப்பட்டினம் வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், பாலமுருகன், வவ்வாலடி ஊராட்சிமன்றத் தலைவர் ப.கார்த்திகேயன், அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

