தூத்துக்குடி
விமான நிலையத்தில் வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குளம் முடிக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி புதிய பயணிகள் முனையம், விமான ஓடுதளம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் இன்று மாலையில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார்.
அவரை விமான நிலைய இயக்குனர் பி.சிவபிரசாத் வரவேற்றார். தொடர்ந்து விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பயணிகள் முனையத்தை அமைச்சர் பார்வையிட்டார். அதே போன்று விமான ஓடுதளம் விரிவாக்க பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பணிகள் அனைத்தையும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின் போது, தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் ஜெயராமன், கட்டுமான பிரிவு சரவணன், எலக்ட்ரிக்கல் பிரிவு பிராங்கிளின் ஜோசப், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

