திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 189–வது அவதார தின விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்டர் அவதார தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டு 189–வது அவதார தின விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, முன்தினம் அதிகாலையில் பணிவிடை, உகப்படிப்பு, காலையில் அன்னதர்மம் நடந்தது. மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்னதர்மம், மாலையில் பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் சிகர நாளான இன்று அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடந்தது. காலை 6.45 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதார தின விழா பணிவிடையும் நடைபெற்றது. அப்போது கடற்கரையில் கூடியிருந்த திரளான பக்தர்கள் ‘அய்யா சிவ சிவ அரகரா அரகரா‘ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம், இனிமம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

