அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கல்
நாகை மார்ச் 30
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கீழ்வேளுர் வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் செயல்விளக்கம் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் கீழ்வேளுர் வட்டாரத்தை சேர்ந்த 16 விவசாயிகளுக்கு தலா ரூ.4ஆயிரம் மதிப்பீட்டில் அட்மா திட்டத்தின் கீழ் தென்னை மரம் ஏறும் கருவி, தென்னை வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில் நுட்ப மருந்து, பேட்டரி தெளிப்பான், கோனோவீடர், பயிர் ஊட்ட ஊக்கிகள் மற்றும் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் பூச்சு மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைகளின் படி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எளிதாக எடுத்து செல்லும் வகையில் வட்டாரத்திற்கு ஒரு மக்கள் பிரதிநிதியை அட்மா திட்ட தலைவராக நியமிக்க அறிவுறுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அட்மா திட்டத்தின் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தொழில் நுட்பங்கள் பயிற்சியாகவும், செயல் விளக்கங்களாகவும் விவசாயிகளின் தேவைக்கேற்ப அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாக்கள், விவசாயிகள் – வேளாண் வல்லுநர்கள் கலந்துரையாடல் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தில் வட்டாரத்திற்கு ஒரு வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் நியமிக்கப்பட்டு கிராமங்கள் தோறும் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது எனவும், விவசாயிகள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலா அக்கண்டராவ், நேர்முக உதவியாளர் (வே) வெங்கடேசன், வட்டார உதவி இயக்குநர் தயாளன், வட்டார அட்மா குழு தலைவர்கள் கோவிந்தராஜன், பழனியப்பன், வேளாண்மைதுறை அலுவலர்கள், வட்டார அட்மா திட்ட மேலாளர்கள் தமிழ்மணி, கார்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

