தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சியின் நெல்லை மண்டல பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர், பூசாரி பேரவை மாநில அமைப்பாளர் சாஸ்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளர்ச்சி பெறவும், மக்கள் வாழ்வாதாரத்தை காக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாணவி லாவண்யா இறப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மேலூர் மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: பல்வேறு வளர்ச்சிக்காக தென்மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது மின் உற்பத்தி எந்திரம் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும். உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க மத்திய அரசால் மட்டுமே முடியும். தமிழக அரசு டெல்லியில் இருந்து மட்டுமே அழைத்து வர முடியும். தமிழக கவர்னரை எதிர்ப்பது நல்லது அல்ல. மத்திய அரசுடன், மாநில அரசு சுமுக உறவு வைத்து இருக்க வேண்டும். இந்து ஒற்றுமை மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

